அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர அள்ளித்தந்த வானம்! வரும் 7 முதல் பாசனத்திற்கு நீர் திறக்க திட்டம்
உடுமலை; உடுமலை அமராவதி அணை நீர்மட்டம், 80 அடியாக உயர்ந்த நிலையில், அணையிலிருந்து வரும், 7 முதல் நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், 29 ஆயிரத்து, 387 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 25,250 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.கடந்தாண்டு, பாசன காலம் நிறைவு பெற்ற நிலையில், மழையின்றி அணைக்கு நீர்வரத்தும் சரிந்தது. கடந்த மாதம், 24ம் தேதி அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 48.39 அடியாக இருந்தது.நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை முன்னதாகவே துவங்கிய நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, தலையாறு, மூணாறு, வால்பாறையின் கிழக்கு பகுதி மற்றும் கொடைக்கானல் மேற்கு பகுதிகளில் கன மழை பெய்தது.இதனால், அணையின் முக்கிய நீர்வரத்து ஆறுகளான,பாம்பாறு, சின்னாறு, தேனாறு மற்றும் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி, அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 80.68 அடியாக நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3232.20 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு வினாடிக்கு, 741 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது. கடந்த, 10 நாட்களில், 32. 29 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், அணை வாயிலாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீர் திறக்க கருத்துரு
அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, ஜூன் மாதமும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, ஆக., மாதமும் வழக்கமாக பாசனத்திற்கு நீர் வழங்கப்படும்.நடப்பாண்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், முதற்கட்டமாக, அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு ஆகிய ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அதே போல், பழைய, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளும் நீர் திறக்க கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், பாசன ஆண்டை துவக்கும் வகையில், முதற்கட்டமாக ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, வரும் 7ம் தேதி முதல் நீர் திறக்க அரசுக்கு அதிகாரிகள் கருத்துரு அனுப்பியுள்ளனர்.அதே போல், மற்ற பாசன நிலங்களுக்கும் நீர் திறப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரித்து வருவதாகவும், உயிர் தண்ணீர் திறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.