உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடை காலத்துக்கான குடிநீர் வினியோகத்தில் கவனம் தேவை! உள்ளூர் நீராதாரங்கள் பராமரிப்பு அவசியம்

கோடை காலத்துக்கான குடிநீர் வினியோகத்தில் கவனம் தேவை! உள்ளூர் நீராதாரங்கள் பராமரிப்பு அவசியம்

உடுமலை; கோடை காலம் துவங்கியதும், திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் வினியோகிப்பதில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட துவங்கியுள்ளது; பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளூர் நீராதாரங்களை பராமரிக்க ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளுக்கும், திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.அணையில் குடிநீர் தேவைக்காக, போதியளவு தண்ணீர் இருப்பு செய்யப்பட்டு, நீரேற்று நிலையங்கள் வாயிலாக ஊராட்சிகளுக்கு குடிநீர் அனுப்புகின்றனர்.ஆனால், பிரதான குழாய் உடைப்பு, நீர் உந்து நிலையங்களில் மின்தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் கிராமங்களுக்கு செல்வதில்லை.கோடை காலம் துவங்கி குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், கூட்டுக்குடிநீர் திட்ட வினியோகத்தில் குளறுபடிகள் ஏற்பட துவங்கியுள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட, 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், தற்போதே குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.கூட்டுக்குடிநீர் திட்டங்களின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான குழாய் உடைப்பு, மோட்டார் பழுது போன்ற பணிகளில் காலதாமதம் ஏற்படுவது வினியோகத்தை பாதிக்கிறது.இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக, உள்ளூர் நீராதாரங்களை ஒன்றிய நிர்வாகங்கள் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கைவிடப்பட்ட திட்டங்கள்

ஊராட்சிகளில் முன்பு போர்வெல் அமைத்து, அருகிலேயே சிறிய மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, தண்ணீர் வினியோகித்து வந்தனர். குடிநீர் தவிர்த்து பிற தேவைகளுக்காக இந்த தண்ணீர் பயன்பட்டு வந்தது.சில கிராமங்களில், போர்வெல் தண்ணீரே குடிநீராகவும் பயன்பட்டது. பல்வேறு திட்டங்களின் கீழ், இவ்வாறு அமைக்கப்பட்ட போர்வெல்கள், சிறிய மேல்நிலைத்தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் போதிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டன.பெரும்பாலான சிறிய குடிநீர் திட்டங்களுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.வரும் கோடை காலத்தில் வறட்சி எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக உள்ளூர் நீராதாரங்களை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும்.ஒன்றிய பொது நிதி திட்டங்களில், இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில், குப்பைக்கிடங்காக மாறியிருந்த கிராம பொதுக்கிணறுகளை துார்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். தொடர்ச்சியாக கண்காணிப்பு இல்லாததால், மீண்டும் கிணறுகள் குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளன. இந்த கிணறுகளை தொடர்ச்சியாக பராமரிக்கவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை