உடுமலை: 'மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட்டை விரிவாக்கம் செய்து, தேசிய நெடுஞ்சாலையில் நிலவும் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. பழநி, உடுமலை உள்ளிட்ட நகரங்களுக்கு மையமாக உள்ள இப்பகுதியில், கடந்த, 1998ல், பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, பேரூராட்சி பொறுப்பில் பராமரிப்பு விடப்பட்டது. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணியர், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட்டை பயன்படுத்துகின்றனர். கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் வழியாக, நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில பஸ்கள் தவிர்த்து, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து பழநிக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களும், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் வருவதில்லை. அனைத்து தொலைதுார பஸ்களும், பஸ் ஸ்டாண்ட் முன், தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று பயணியரை ஏற்றிச்செல்கின்றன. இதனால், நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது. பஸ் ஸ்டாண்டுக்குள் தொலைதுார பஸ்கள் செல்லாததால், பயணியரும், நெடுஞ்சாலையிலேயே நின்று கொள்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்து, பஸ்கள் எளிதாக திரும்ப, இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்; அப்பகுதியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.