விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; வரத்தும் விலையும் அதிகரிப்பு
உடுமலை : உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, கொப்பரை வரத்து அதிகரித்திருந்த நிலையில், விலையும் உயர்ந்து விற்பனையானது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, ஈரோடு, விளாமரத்துப்பட்டி, குறிஞ்சேரி, பூளவாடி, புக்குளம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 31 விவசாயிகள், 149 மூட்டை அளவுள்ள, 7,450 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 8 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ரூ.120.99 முதல், ரூ.128.99 வரையும், இரண்டாம் தரம், ரூ.90.11 முதல், 118.99 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.கடந்த வாரம் விலை குறைவு காரணமாக, கொப்பரை வரத்து குறைந்திருந்த நிலையில், நேற்று நடத்த ஏலத்தில், அதிகளவு விவசாயிகள் பங்கேற்றதோடு, வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், இங்கு, இ - நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.