ஒப்பந்ததாரர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பல்லடம்; அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 19 பணிகளுக்கு, பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இதற்காக, உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டதால், ஒப்பபந்ததாரர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்புடைய பணிகளுக்கு முதலிலும், இதற்கு மேல் மதிப்புடைய பணிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும் ஒப்பந்தப்புள்ளி பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஒப்பந்தப் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகளைபெட்டியில் போட வந்தோம். ஆனால், பெட்டியில் போட வேண்டாம் என்று கூறி கையில் பெற்றுக் கொண்டனர்.பெறப்பட்ட ஒப்பந்த புள்ளியில் யார் குறைந்த மதிப்பீடு குறிப்பிட்டுள்ளார்களோ, ஒப்பந்த மதிப்பீடு அடிப்படையில் அவருக்கு பணிகள் வழங்க வேண்டும். ஆனால், மீண்டும் நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டதாக மாலை, 5:00 மணிக்குதான் சொல்கின்றனர். ஒப்புநோக்கு பட்டியல் தராத வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.---2 படங்கள்பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், போராட்டம் நடத்திய ஒப்பந்ததாரர்கள்.ஒப்பந்தப்புள்ளி மறுதேதி குறித்து அலுவலகத்தில் ஒட்டப்பட்ட அறிவிப்பு
'நாங்கள் தீர்மானிக்க முடியாது'
முறைகேடுகள் நடக்காமல் இருக்க, ஆன்லைன் முறையில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படுகின்றன.அவ்வாறு பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ஆய்வு செய்து, ஒப்புநோக்கு பட்டியல் தயாரித்த பின், ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார். ஆன்லைன் முறை வந்த பின், ஒப்பந்த புள்ளிகளை பெட்டிகளில் போடுவது கிடையாது. நிர்வாக காரணங்களுக்காக, ஒப்புநோக்கு பட்டியல் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுவதால், இதை நாங்கள் தீர்மானிக்க முடியாது.- கனகராஜ், பல்லடம் பி.டி.ஓ.,