உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர் சாகுபடி மதிப்பீட்டாய்வு துவங்குகிறது

பயிர் சாகுபடி மதிப்பீட்டாய்வு துவங்குகிறது

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு ராபி பருவத்தில், 224 கிராமங்களிலும், காரீப் பருவத்தில், 72 கிராமங்களிலும் வேளாண், தோட்டக்கலை பயிர் சாகுபடி மற்றும் அறுவடை மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பொது பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தில், ஆண்டுதோறும், அந்தந்த மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் வேளாண், தோட்டக்கலை பயயிர்களின், பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆய்வு பயிர்களுக்கும், சுழற்சி முறையில் சாகுபடி நிலம் தேர்வு செய்யப்பட்டு, பயிர் சாகுபடி மற்றும் அறுவடை விவரங்களை உள்ளடக்கிய, மதிப்பீட்டாய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு பயிர்களின் விளைச்சல், மொத்த உற்பத்தி விவரங்கள், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சி, தானிய உற்பத்தி, விவசாயிகளுக்கு தேவைப்படும் திட்டங்களை உருவாக்க இந்த ஆய்வுகள் கைகொடுக்கின்றன. பேரிடர் காலங்களின்போது பயிர்கள் பாதிக்கப்படும்போது, இழப்பீடு வழங்குவதற்கும் இது உதவுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பொது மதிப்பீட்டாய்வு திட்டம் மற்றும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், நடப்பு 1435 பசலி ஆண்டுக்கான (2025- 26) காரீப் மற்றும் ராபி பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. வேளாண், தோட்டக்கலை துறை அலுவலர்கள், 200 பேர் வரை இப்பணிகளில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, மண்டலம் வாரியாக, பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. உடுமலை, தாராபுரம் மண்டலங்களுக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் மதிப்பீட்டாய்வு களப்பணிகளில் ஈடுபட உள்ள வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பூர், பல்லடம், பொங்கலுார், அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய ஐந்து ஒன்றிய அலுவலர்களுக்கான இரண்டுநாள் பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று துவங்கியது. மாவட்ட புள்ளியியல் துறை இணை இயக்குனர் இசக்கியப்பன் தலைமை வகித்தார். புள்ளியியல் துறை கோவை மண்டல இணை இயக்குனர் ஜெரீனா துவக்கிவைத்தார். வேளாண் துணை இயக்குனர் பாமா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சசிகலா, மாவட்ட புள்ளியியல் அலுவலர் மணிமாறன் ஆகியோர், பயிற்சி அளித்தனர். -- பயிர் சாகுபடி - அறுவடை மதிப்பீட்டாய்வு குறித்த பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சசிகலா பயிற்சி அளித்தார். அருகில், வேளாண் துணை இயக்குனர் பாமா, புள்ளியியல் துறை துணை இயக்குனர் இசக்கியப்பன், புள்ளியியல் அலுவலர் மணிமாறன். இதில் பங்கேற்ற வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள். ஆய்வுத்திட்டம் வகுப்பு திருப்பூரில், சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம், பாசிப்பயிறு, வாழை, கரும்பு உள்பட பல்வேறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டம் முழுவதும், பொது பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தில், ராபி பருவத்தில் பயிரிடப்படும், தட்டை பயிறு, நிலக்கடலை, கொள்ளு, மக்கச்சோளம், நெல், சோளம், பருத்தி பயிர்களுக்கு, 224 கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், காரீப் பருவத்தில், நிலக்கடலை, மக்கச்சோளம், சோளம், கரும்பு பயிர்களுக்கு, 72 கிராமங்களில் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பருத்தி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு, 224 கிராமங்களிலும்; காரீப் பருவத்தில், நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், கரும்பு பயிர்களுக்கு, 72 கிராமங்களிலும் பயிர் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், காரீப் பருவ மக்கச்சோளம், நிலக்கடலை, சோளம் பயிர்களுக்கு, 55 கிராமங்களிலும்; வாழை, மரவள்ளி கிழங்கு, வெங்காயம், மஞ்சள், தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு, 46 கிராமங்களிலும் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பயிர் அறுவடை பரிசோதனை விவரங்களை, டி.ஜி.சி.இ.எஸ்., என்ற மொபைல் செயலியிலும், காப்பீடு திட்டம் தொடர்பான விவரங்களை, பி.எம்.எப்.பி.ஒய்., என்ற மொபைல் செயலியிலும் பதிவு செய்யவேண்டும். வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள், சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படும் சாகுபடி பரப்புகளுக்கு நேரில் சென்று, பயிர் மதிப்பீட்டாய்வு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. - புள்ளியியல் துறையினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை