ஆக்கிரமிப்பு அகற்ற தாமதம்; வருவாய்த்துறை மெத்தனம்
பல்லடம் : பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் கிராமத்தில் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவற்றை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும், இப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் மனைவி சுப்புலட்சுமி என்பவர், கடந்த, 2021ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.கோர்ட் விசாரணையை தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை வருவாய்த்துறை வெளியிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை மீட்க, திருப்பூர் கலெக்டருக்கு கோர்ட் உத்தரவிட்டது.தொடர்ந்து, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கலெக்டர் பல்லடம் வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார். 'கோர்ட் அறிவுறுத்தலின்படியும், கலெக்டர் உத்தரவிட்ட பின்னும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் வருவாய்த்துறை மெத்தனம் காட்டி வருகிறது; மூன்று ஆண்டுக்கு மேலாக ஆக்கிரமிப்பு பிரச்னை நீடித்து வருகிறது' என்று சுப்புலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.வாகனங்கள் சென்று வர இடையூறு உள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.