புதிதாக கட்டிய வடிகால் இடிப்பு; மாநகராட்சி - நெடுஞ்சாலை துறை மல்லுக்கட்டு
திருப்பூர்; காங்கயம் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை கட்டிய மழை நீர் வடிகாலை இடித்து அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இது குறித்து இரு தரப்பிடையே மோதல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. திருப்பூர் - காங்கயம் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரோடு அகலப்படுத்தும் பணி கடந்த மேற்கொள்ளப்பட்டது. ரோட்டில் இருபுறமும் மழை நீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை கட்டிய மழைநீர் வடிகாலை, விஜயாபுரம் நால் ரோடு பகுதியில் ஓரிடத்தில் இடித்து அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி சார்பில் பொக்லைன் வைத்து, ஒரு வணிக வளாகம் முன் மூடப்பட்ட கான்கிரிட் வடிகால் இடித்து அகற்றும் பணி நடந்தது. தகவல் அறிந்து சென்ற நெடுஞ்சாலைத் துறையினர் இது குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும், வடிகாலை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்றனர். இதனால் அப்பணி நிறுத்தப்பட்டது. அங்கு நேற்று மாலை நீண்ட நேரம் பரபரப்பு நீடித்தது. அப்பகுதியினர் கூறியதாவது: வடிகால் கட்டப்பட்டு ஆறு மாதங்களாகிறது. இப்பணி நடக்கும் போதே கட்டட உரிமையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். தற்போது முறையாகப் பயன்பாட்டில் உள்ள வடிகாலை மாநகராட்சி தரப்பில் மாற்றி கட்ட வேண்டும் என்று இடிக்கத் துவங்கியுள்ளனர். இதனை ஏன் இடிக்க வேண்டும்; எப்போது கட்டி முடிப்பார்கள் எனத் தெரியவில்லை. கட்டட உரிமையாளர்களுக்கு ஏற்படும் சிரமம் சொல்லி மாளாது. இவ்வாறு அவர்கள் கூறினர். பணிகள் தொடரும்... நெடுஞ்சாலைத் துறை கட்டும் மழை நீர் வடிகால் ஆங்காங்கே ரோட்டில் மழை நீர் தேங்காமல் வடிகாலில் சேரும் வகையில் அமைக்கின்றனர். ஆனால், முறையாக அருகேயுள்ள நீர் வழிப்பாதை அல்லது ஓடையில் இது சென்று சேர வேண்டும். இந்த இடத்தில் வடிகால் மட்டம் சரியாக இல்லை. அருகேயுள்ள ஓடைக்கு நீர் செல்லும் வகையில், வடிகால் மேலும் ஆழமாக அமைக்க வேண்டும். அதற்காகத் தான் நெடுஞ்சாலைதுறையின் உரிய தகவல் அளித்து அனுமதி பெற்றுத் தான் பணி துவங்கியது. புதிதாக வந்த அதிகாரிகள் யாராவது தகவல் முழுமையாகத் தெரியாமல் கேட்டிருக்கலாம். உரிய விளக்கம் அளித்து பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். - மாநகராட்சி அதிகாரிகள்