இறந்தும் பலருக்கு வாழ்வளித்த முதியவர் அரசு மரியாதையுடன் உடல் தகனம்
உடுமலை,; உடுமலையில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, பலருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. முதியவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.உடுமலை அருகேயுள்ள, பூலாங்கிணர் கிராமத்தைச்சேர்ந்தவர் மாணிக்கம்,70. ஓய்வு பெற்ற மில் தொழிலாளி.கடந்த, 18ம் தேதி, அங்குள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்ற போது, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.மாணிக்கத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில், கல்லீரல், கண்கள், எலும்புகள், தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.இறந்தும் பலருக்கு வாழ்வு அளித்த, மாணிக்கத்தின் உடலுக்கு,உடுமலை கோட்டாட்சியர் குமார் தலைமையிலான அதிகாரிகள், மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர். பின்னர், உடுமலை எரிவாயு மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.உடல் உறுப்புகளை தானம் செய்து, முன் உதாரணமாக குடும்பத்தினர் செயல்பட்டு, பலருக்கு வாழ்வளித்துள்ளனர். இறந்தும், உடலும், உயிராகவும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதாக, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.