சோலார் மின்வேலி திட்ட விரிவாக்கம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருப்பூர்; மான் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க, சோலார் மின்வேலி திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவிநாசி ஒன்றிய பகுதியில் உள்ள கோதபாளையத்தில், ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. அங்குள்ள குளத்தில் நிரந்தரமாக வசித்து வரும் மான்கள், சில நேரம் இரைதேடி செல்லும் போது, வழிதவறி வெளியே வந்து விடுகின்றன.மான்கள் கூட்டமாக சென்று, அருகே உள்ள தோட்டங்களில் மேய்கின்றன. சோளப்பயிர், காய்கறி பயிர்கள், வாழை என, எவ்வகை பயிராக இருந்தாலும், பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளும், அடிக்கடி கலெக்டரிடம் சென்று முறையிடுவது வாடிக்கையாகிவிட்டது.மான்கள் வசிப்பிடத்தின் மிக அருகே உள்ள விவசாயிகள், வேறு வழியின்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இருப்பினும், குறு, சிறு விவசாயிகள் அத்தகைய வசதி கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர்இதுகுறித்து விவ சாயிகள் கூறுகையில், 'சோலார் மின்வேலி அமைத்தால், மான், மயில் போன்றவற்றிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம். அதிக மின்சாரம் பாயாது என்பதால், உயிரிழப்பு அபாயம் இருக்காது.சோலார் மின்வேலி அமைக்க, குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே மானியம் வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். விலங்குகளால் விவசாய பயிர்களுக்கு பாதிப்பு உள்ள பகுதிகளில், அதிகபட்ச மானியத்துடன் சோலார் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்,' என்றனர்.வேளாண் பொறியியல் துறை அலுவலர்களிடம் கேட்டபோது,'மலைஅடிவார பகுதி, வனப்பகுதிகள் அருகே உள்ள விவசாய நிலங்களில் மட்டும், சோலார் வேலி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.வன விலங்குகளால் அதிக பாதிப்பு உள்ளவர்கள், அருகே உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்துக்கு சென்று விசாரித்து, தங்கள் பகுதியில், அரசு மானியத்தில் வேலி அமைக்கும் திட்டம் குறித்து கேட்டறியலாம்,' என்றனர்.