மானியம் கிடைத்தால் மலர் சாகுபடி; விவசாயிகள் எதிர்பார்ப்பு
உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், மலர் சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலைத்துறை வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., அமராவதி மற்றும் கிணற்றுப்பாசனத்திற்கு, பல்வேறு தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மலர் சாகுபடி இப்பகுதியில் குறைந்தளவே மேற்கொள்ளப்படுகிறது.சீசன் சமயங்களில், கோழிக்கொண்டை, செவ்வந்தி உட்பட மலர்கள் மட்டும், 50 ஏக்கருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.மிதமான சீதோஷ்ண நிலை நிலவும், உடுமலை பகுதியில், மலர் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புகள் இருந்தும், போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல், விவசாயிகள் தயக்கத்தில் உள்ளனர்.இதனால், உடுமலை பகுதி மலர்களுக்கான தேவை பிற மாவட்ட உற்பத்தியை அடிப்படையாக கொண்டே உள்ளது.'பொக்கே' ரோஜா மலர்கள் பெங்களுரூ, ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்தும், பன்னீர் ரோஜாக்கள் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தருவிக்கப்படுகிறது.மேலும், மல்லிகை, முல்லை உட்பட மலர்கள் தேனி, வத்தலக்குண்டு உட்பட பகுதிகளிலிருந்து நாள்தோறும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால், மலர்களின் விலை விசேஷ நாட்களில், பல மடங்கு உயர்கிறது.அதிக விலையேற்றத்தால், சீசன் சமயங்களில், மக்கள் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்கள், தோட்டக்கலைத்துறையால் செயல்படுத்தப்பட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.புதிய தொழில்நுட்பங்களான சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம், நீர் வழி உரம் ஆகியவற்றை உடுமலை விவசாயிகள் எளிதாக பின்பற்றி, காய்கறி சாகுபடியில், அதிக விளைச்சல் பெற்று வருகின்றனர்.எனவே, ரோஜா உட்பட மலர்களை உற்பத்தி செய்வதற்கான, பசுமை குடில் முறை மற்றும் பிற மலர்களுக்கு விதை மானியம் ஆகியற்றை வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.