தர்ப்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
உடுமலை: உடுமலை பகுதிகளில், கோடை கால விற்பனையை எதிர்பார்த்து, தர்ப்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதியில், கிணறு மற்றும் போர்வெல்லை நீராதாரமாகக்கொண்டு பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்கின்றனர். மேலும், கோடை கால சீசனை இலக்காக வைத்து, தர்பூசணி சாகுபடி செய்யவும், கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை சுற்றுப்புற பகுதிகளான, தாந்தோனி, சின்னவீரம்பட்டி, மருள்பட்டி, கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், தற்போதைய சீசனில், தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: மல்ஷிங் ஷீட், மேட்டுப்பாத்தி அமைத்து, நுண்ணீர் பாசனத்தில், தண்ணீர் பாய்ச்சுவதால், சாகுபடியில், தண்ணீர் தேவை வெகுவாக குறைகிறது; களைகளையும் எளிதாக அகற்றலாம். ஏக்கருக்கு, அதிகபட்சமாக, 20 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், சாகுபடி பரப்பு அதிகரித்து, தேவை குறைவால், தர்பூசணியை கொள்முதல் செய்ய ஆளில்லாமல், விளைநிலங்களிலேயே வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகினர். இந்தாண்டு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், தர்பூசணி சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.