உழவர் சந்தை அமையுங்க விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை, ;மடத்துக்குளம் தாலுகாவில், உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மடத்துக்குளத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. மேலும், மடத்துக்குளம் பகுதிகளில், அமராவதி, பி.ஏ.பி., மற்றும் இறவை பாசனத்தில், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் உழவர் சந்தையில் விற்பனை செய்ய உடுமலை உழவர் சந்தைக்கு வர வேண்டியுள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திற்கு, ஒரே உழவர் சந்தையாக உள்ளதால், விவசாயிகளுக்கு போதிய இட வசதியில்லை.மடத்துக்குளம் தாலுகாவாக உருவாக்கப்பட்டு, 15 ஆண்டுகளான நிலையில், உழவர் சந்தை அமைக்க வேண்டும், இப்பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.