அரசு கட்டட மின் கட்டணம்; ஆன்லைனில் மட்டுமே வசூல்
திருப்பூர்; தமிழக அரசுத்துறை கட்டடங்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது.தமிழ்நாடு மின்சார வாரியம், புதிய மின் இணைப்பு பெறுவது துவங்கி, அனைத்து சேவைகளையும், 'ஆன்லைன்' சேவையாக மாற்றியுள்ளது. அதேபோல், மின் கட்டணம் செலுத்துவதையும் எளிதாக மாற்றியுள்ளது.வீடு மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு மின் கட்டணம் செலுத்தவும், பல்வேறு வசதி செய்யப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசு கட்டடங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தும் கட்டடங்களுக்கான மின் கட்டணத்தை, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்; வசூல் மையங்களில், ரொக்கமாக செலுத்த முடியாதபடி, 'சாப்ட்வேர்' திருத்தம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு கட்டடங்கள், மாநில அரசு கட்டடம், உள்ளாட்சி அமைப்பு மற்றும் பொதுமக்கள் என, நான்கு வகையான பிரிவுகளில், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கான மின் கட்டணத்தை 'ஆன்லைன்' வாயிலாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, மாநில அரசு கட்டடங்களுக்கு, மின் கட்டணத்தை 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே செலுத்தும் உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த நடைமுறை மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடங்களுக்கும், விரைவில், விரிவாக்கம் செய்யப்படும்லு என்று கூறப்படுகிறது.