வகை வகையாய் மரங்கள் விரியும் பசுமை கரங்கள்
திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், தாராபுரம் ஆர்.டி.ஓ., முகாம் அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மரக்கன்றுகள் நடும் பணி வேகமாக நடந்து வருகிறது. பருவமழையை பயன்படுத்தி, மரக்கன்று வளர்ச்சி பெற ஏதுவாக, திட்டமிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. தாராபுரம் ஆர்.டி.ஓ., முகாம் அலுவலக வளாகத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, நஞ்சியம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ரஜினிகாந்த் மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட குழுவினர் இணைந்து மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர். வளாகத்தில், புளி, சப்போட்டா, கொய்யா, கொடுக்காபுளி, சின்ன மாமரம், கடம்பம், வேம்பு, இலுப்பை, சீதா, பலாமரம், நீர்மருது, துாங்குவாகை, புங்கன், நாவல் உட்பட, 33 வகையான, 230 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.