மருத்துவ காப்பீடு திட்டத்தில்... இரண்டு குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை
திருப்பூர்: காங்கயத்தில், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், இரண்டு குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கயம் கார்மல் பள்ளியில் கடந்த 20ம் தேதி, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற்றது. இதய பாதிப்பு கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு, இம் முகாமில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட ஏழு முகாம்களில், 10 ஆயிரத்து 255 பேர் பயனடைந்துள்ளனர். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனடைந்த குழந்தைகளின் பெற்றோர், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். காங்கயத்தை சேர்ந்த குழந்தை யாழினியின் பெற்றோர் கூறியதாவது: எனது கணவர், அரிசி ஆலையில் பணிபரிந்துவருகிறார். ஒரு வயதான எங்கள் குழந்தை யாழினிக்கு, பிறவியிலேயே இதய குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது; தற்போது குழந்தை மிகவும் நலமாக உள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதேபோல், பிறவியிலேயே இதய குறைபாடு கண்டறியப்பட்டு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு வயது நிறைவடைந்த குழந்தை ரிதன்யாவின் பெற்றோரும், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.