உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏற்றுமதி தடையை நீக்காவிட்டால் சின்ன வெங்காயம் விலை உயரும்

ஏற்றுமதி தடையை நீக்காவிட்டால் சின்ன வெங்காயம் விலை உயரும்

பல்லடம்:''ஏற்றுமதி தடையை நீக்காவிட்டால், சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தை தொடும்'' என, விவசாயிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.இது குறித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:பெரிய வெங்காயம் நாடு முழுவதும் பரவலாக அறுவடை செய்யப்படுகிறது. ஆனால், சின்ன வெங்காயம் என்பது தமிழகத்தில் மட்டுமே சாத்தியமாக விளைவிக்கக்கூடியது. ஆனால், மத்திய அரசு பெரிய வெங்காயத்துடன் சேர்த்து சின்ன வெங்காயத்துக்கான ஏற்றுமதி தடையை விதித்துள்ளது. இதனை நீக்க வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சின்ன வெங்காயம் கிலோ, 17 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இன்றைய சூழலில், பூச்சி மருந்துகள், உரம், ஆள் கூலி உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு இடையே விவசாயம் செய்வது என்பது சவாலான விஷயம்.அதிலும், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் வேலைப்பளு உள்ளது. இருப்பினும், சுமையை கருதாமல், அதிக முதலீடு செய்து, சாகுபடியில் ஈடுபடுகின்றனர். கிலோ, 30 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.இதற்கிடையே, மத்திய அரசு விதித்துள்ள வெங்காய ஏற்றுமதி தடையால், விவசாயிகள் பலர் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்வதை தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தட்டுப்பாடு ஏற்பட்டு, கடந்த காலங்களைப் போன்றே, சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரும் அபாயம் உள்ளது. அவ்வாறு உயர்ந்தால் அதற்கு விவசாயிகள் காரணமல்ல.எனவே, மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி, சின்ன வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும். சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்கமளித்து உற்பத்தியைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை