விதி மீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: அலட்சிய அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு
உடுமலை: உடுமலையில், விதி மீறி பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். உடுமலை நகரப்பகுதிகளில், ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பஸ் ஸ்டாப்கள் என அனைத்து பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நுாற்றுக்கணக்கான பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன. பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் தளி ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், அனுஷம் ரோடு சந்திப்பு என அனைத்து இடங்களிலும்,பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என, அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதி மீறி, இவ்வாறு அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், பொதுமக்களுக்கு கவனச்சிதறல், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும், பெரும்பாலான பகுதிகளில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரோடுகளை மறைத்து வைத்துள்ளதால், போக்குவரத்து பாதித்து வருகிறது. பல இடங்களில் காற்றுக்குத்தாங்காமல், வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்து விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, விதி மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி அதிகாரிகள், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.