கணக்கு இனி பிணக்கு கிடையாது; மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
திருப்பூர்; கணக்கு இனி பிணக்கல்ல... கற்றல் குறைபாடுள்ள அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் கண்டறியப்பட்டு திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மாநில அளவிலான மதிப்பீடு முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, 'திறன்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஆசிரியர்கள் வாயிலாக ஆங்கிலம், தமிழ், கணிதம் பாடங்களில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் குறைவான மதிப்பெண் பெற்ற 40 சதவீதம் மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு பள்ளி நாட்களில் இந்த பாடப்பிரிவுகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இத்தகைய மாணவ, மாணவிகளுக்கு தற்போது திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கற்றல் எளிதாகும் வட்டார வள மையத்தினர் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் கற்றல் குறைப்பாடு உள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. ஆங்கிலம், தமிழ், கணிதம் பாடங்களில் வகுப்புகள் எடுப்பதற்கும், அதில் உள்ள நுட்பங்களை சொல்லி தருவதற்கும் ஒரு பாடத்திற்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் நான்கரை மணி நேரம் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 30 நாட்களுக்கு மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும். மீண்டும் அவர்களுக்கு தேர்வு வைத்து கற்றல் திறன் சோதிக்கப்படும். அதில் எந்த பாடத்தில் அவர்கள் மதிப்பெண்கள் குறைவாக பெறுகிறார்களோ, அந்த பாடத்தில் 20 வாரம் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அரசு பள்ளியில் உள்ள எந்த மாணவர்களுக்கும் கற்றல் குறைபாடு இருக்காது. இவ்வாறு, அவர்கள் கூறினர். போதிய ஆசிரியர்கள் தேவை மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை ஒன்றாக இணைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வகுப்பறைகளை ஒதுக்குவதிலும் பிரச்னை உள்ளது. சிறப்பு கவனம் தேவைப்படும், ரெகுலர் மாணவர்களுடன் ஒரே வகுப்பில் கற்பிக்கப்படுவதால், அவர்கள் முழுமையாக கற்கும் வாய்ப்பு குறைகிறது. கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதே, இந்த சிக்கலுக்கு தீர்வு. ஆனால், ஏற்கனவே காலியிடங்களுடன் அரசுப்பள்ளிகள் அல்லாடுகின்றன. பள்ளிகளில் ஆசிரியர்களை போதுமான எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.