உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழனிசாமி திருப்பூர் வருகை ; மக்களுக்கு அழையுங்கள்.. அ.தி.மு.க.,வினருக்கு வேலுமணி அறிவுரை

பழனிசாமி திருப்பூர் வருகை ; மக்களுக்கு அழையுங்கள்.. அ.தி.மு.க.,வினருக்கு வேலுமணி அறிவுரை

திருப்பூர்; மாநிலம் முழுக்க தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, விரைவில், திருப்பூர் வரவுள்ளார். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று மாலை, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், திருப்பூர் மாநகர் மாவட்டம், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வேலுமணி பேசுகையில், ''திருப்பூருக்கு கட்சி பொதுச்செயலர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு பூத்தில் இருந்தும், 200 பேரை திரட்டி வர வேண்டும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான், தி.மு.க., அரசு செய்து வருகிறது என்பதை, மக்கள் மத்தியில் பட்டியலிட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக, தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் கூட தி.மு.க., ஆட்சி கவிழ வேண்டும் என நினைக்க துவங்கி விட்டனர். இதை சாதகமாக்கி, அவர்களின் ஓட்டுகளை அ.தி.மு.க.,வுக்கு பெற வேண்டும். கட்சி பொது செயலர் பழனிசாமியின் மக்கள் சந்திப்பு தொடர்பான அறிவிப்பை அழைப்பிதழாக கொடுத்து, மக்களை அழைக்க வேண்டும். சுவர் விளம்பரம் எழுத வேண்டும். புதிய வாக்காளர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும்,'' என்றார். எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், தாமோதரன், ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., விஜயகுமார் நன்றி கூறினார்.

வீடு வீடாக வெற்றிலை - பாக்கு

எம்.ஜி.ஆர்., உருவாக்கி வளர்த்தெடுத்த கட்சியை, அவரது மறைவுக்கு பின், ஜெ., அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்துள்ளார். மூன்றாவது தலைமுறையாக பழனிசாமி, கட்சியை வளர்த்து வருகிறார். அவர் திருப்பூர் சுற்றுப்பயணத்தின் போது, தொகுதிக்கு, ஒரு லட்சம் பேரை திரட்ட வேண்டும்; அவரை பார்க்க வாருங்கள் என, வீடு, வீடாக சென்று வெற்றிலை பாக்கு வைத்து மக்களை அழைக்க வேண்டும். - பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !