திருப்பூர்: ஆண்டிபாளையம் குளக்கரையில், பனை மரங்களை வெட்டியதால், பசுமை ஆர்வலர்கள் கொந்தளித்தனர். இதனால், வெட்டப்பட்ட மரங்கள் அதேயிடத்தில் நடவு செய்யப்பட்டது. வெற்றி அறக்கட்டளை சார்பில், 2000ம் ஆண்டில், மங்கலம் நல்லம்மன் தடுப்பணையிலிருந்தும், ஒட்டணையில் இருந்தும் வாய்க்கால்களை துார்வாரி, வறண்டு கிடந்த ஆண்டிபாளையம் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை, வழிகாட்டுதலுடன் பொதுமக்கள் கரசேவை பணியாக செய்து, ஆண்டிபாளையம் குளம் முழுவதும் துார்வாரி பராமரித்தது. குளத்தைச் சுற்றிலும் பனை மரம் வளர்க்கும் வகையில் விதைகள் நடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஆங்காங்கே பனை மரக்கன்று வளர்ந்துள்ளன. பனை காக்கும் நண்பர்கள் என்ற அமைப்பினர், சில மாதங்களுக்கு ஒரு முறை, பனை மரங்களை கவாத்து செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 23ம் தேதி வளர்ந்த பனை மரங்கள் வேருடன் வெட்டப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் அனைவரும், ஆண்டிபாளையம் குளத்திற்கு நேற்று சென்றனர். அருகே உள்ள நில உரிமையாளர் பனைமரக்கன்றுகளை பெயர்த்து எடுத்தது தெரிய வந்தது. இதனால், ஆவேசம் அடைந்த பசுமை ஆர்வலர்கள், மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதற்கிடையில், மரங்களை வெட்டியவர்கள், தங்களது தவறை உணர்ந்து, அதேயிடத்தில் மீண்டும் மரங்களை நட்டு வைத்தனர். பாதுகாப்பு வேலிஅமைக்கப்படும் இந்த விவகாரம் குறித்து, வெற்றி அறக்கட்டளையின் தலைவர் சிவராம் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட கலெக்டராக கோவிந்தராஜ் இருந்த பொழுது ஆண்டிபாளையம் குளக்கரை முழுமையாக மறு சீரமைப்பு செய்யப்பட் டது. 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் முழுவதும் பராமரிக்கப்பட்டது. எல்லையை அளவீடு செய்து கற்கள் நடப்பட்டன. அதன்பின், பனைமரம் விதை நட்டு வளர்க்கப்பட்டது. இந்நிலையில் சுய லாபத்திற்காக பொதுப்பணித்துறை இடத்தில் வழங்கப்பட்டிருந்த பனை மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து வீசியது அதிர்ச்சியாக உள்ளது. மாவட்ட பசுமை பாதுகாப்பு குழு இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மரம் கன்று நட்டு வளர்ப் பதை காட்டிலும் வளர்ந்த மரங்களை பாதுகாப்பதும் முக்கிய பணியாக உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை வாயிலாக ஆண்டிபாளையம் குளம் முழுவதையும் அளவீடு செய்து கொடுத்தால் பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்புக்காக கேட் அமைத்து பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கவும் தயாராக இருப்பதாக கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.