உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்குவதில் சிக்கல்; பெற்றோர் அதிருப்தி

மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்குவதில் சிக்கல்; பெற்றோர் அதிருப்தி

உடுமலை; பள்ளி மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் துவங்குவதில் குளறுபடி ஏற்படுவதால், பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களின் வாயிலாக, அரசின் சார்பில் நிதியுதவி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல், அவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் ஆண்டுதோறும் கொடுக்கப்படுகிறது. பெற்றோர் அல்லது பள்ளி நிர்வாகத்தினர், வங்கிக்கணக்கின் வாயிலாக மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. தற்போது அனைத்தும் நேரடியாக இருக்க வேண்டுமெனவும், அனைத்து மாணவர்களுக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பல மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள மாணவர்கள் அனைவருக்கும் கணக்கு துவக்க அறிவுறுத்தப்பட்டது. இதை துவங்குவதற்கு, ஆதார் பதிவு கட்டாயத்தேவையாக உள்ளது. பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள பெரும்பான்மையான மாணவர்களின் ஆதார் பதிவுகள் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் கணக்கு துவங்கும் போது அந்த ஆதார் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பள்ளிகளில் மாணவர்களுக்கு துவக்க முடியாமல் சிக்கலாகியுள்ளது. புதிதாக ஆதார் எடுப்பதற்கு, வருவாய்த்துறை அல்லது நகராட்சி அலுவலகம்தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கும் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதால், பெற்றோர் அலைக்கழிக்கப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் ஆதார் எடுப்பதற்கு, அரசு தான் சிறப்பு சலுகை அளிக்க வேண்டும் அல்லது முகாம் நடத்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை