உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நலத்திட்டத்தை விரைந்து வழங்குங்க; அரசுக்கு பெற்றோர் வலியுறுத்தல்

நலத்திட்டத்தை விரைந்து வழங்குங்க; அரசுக்கு பெற்றோர் வலியுறுத்தல்

உடுமலை; அரசு பள்ளி மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, சைக்கிள் வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. பஸ் வசதி இல்லாத பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு, பஸ் ஸ்டாப் வரை, வருவதே தொலைதுாரமாக இருப்பதால், சைக்கிள்களை பெரிதும் பயன்படுத்தினர். சில நாட்களில் பஸ்சில் வரும் மாணவர்களும், குறிப்பிட்ட பஸ்சை தவறவிடுவதால் அந்த நாள் பள்ளிக்கு வர முடியாமல் போய்விடுகிறது. அவ்வாறுள்ள பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும், சைக்கிள் முக்கிய தேவையாக உள்ளது. நடப்பு கல்வியாண்டு துவங்கி, மூன்று மாதங்கள் ஆவதால் மாணவர்கள் சைக்கிள்களை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். மேலும் தற்போது பள்ளிகளில் காலை, மாலை சிறப்பு வகுப்புகளும் துவங்கிவிட்டதால், மாணவர்களுக்கு சைக்கிளின் தேவை அதிகமாக உள்ளது. மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை பயன்படுத்திக்கொள்வது முதல், தொலைதுாரப்பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் பலரும் சிரமத்துக்குள்ளாகினர். மாணவர்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை