பை-பாஸ் ரோட்டிலேயே பார்க்கிங் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
உடுமலை; பஸ் ஸ்டாண்ட் பை-பாஸ் ரோட்டில், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல், வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் பை-பாஸ் ரோடு இணைகிறது.தேசிய நெடுஞ்சாலையில், பொள்ளாச்சியில் இருந்தும், தாராபுரம், பல்லடம் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து வரும் பஸ்களும், பிற வாகனங்களும், இந்த பை-பாஸ் ரோடு வழியாகவே செல்கிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் அருகே, வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். ரோட்டுக்கும், அங்குள்ள கடைகளுக்கும், இடையே 'பார்க்கிங்' பகுதி வரையறுக்கப்பட்டு, போக்குவரத்து போலீசாரால், முன்பு கயிறு அமைக்கப்பட்டது.இந்த நடைமுறை சில மாதங்கள் மட்டும் செயல்பாட்டில் இருந்தது. தற்போது 'பார்க்கிங்' பகுதிக்குள் வாகனங்களை நிறுத்தாமல், பை-பாஸ் ரோட்டிலேயே நிறுத்திக்கொள்கின்றனர்.இதனால், பிற வாகனங்கள் செல்ல வழியில்லாமல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக நெரிசலால், காலை, மாலை நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.நீண்ட காலமாக இப்பிரச்னை நீடித்தும், போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெரிசலால் தவிக்கும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று, பழநி ரோட்டை நோக்கி செல்வதால், அங்கு நிற்கும் பயணியருக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.நகரின் பிரதான ரோடாக உள்ள பஸ் ஸ்டாண்ட் பை-பாஸ் ரோட்டில் மட்டுமாவது, நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவிலும் சிக்கல்
பஸ் ஸ்டாண்ட் பை-பாஸ் ரோட்டில் இரவு நேரங்களில், தொலைதுாரங்களுக்கு செல்லும் தனியார் 'ஆம்னி' பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இரவு, 7:00 மணி முதல் குறுகலான இடத்தில், வரிசையாக நிற்கும் பஸ்களால் பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.இத்தகைய பஸ்களுக்கு, தனியாக இடம் ஒதுக்கி நெரிசலை குறைக்க வேண்டும் என்பதும் வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.