உடுமலை: உடுமலை வழியாக, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர். கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - ராமேஸ்வரம், பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. உடுமலை பகுதியில், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள், தென் மாவட்ட மக்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, பெரும்பாலும் ரயில்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்போது இயக்கப்படும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், இந்த ரயில்களில் அமர இடமின்றியும், நெருக்கடியில் செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும், பெண்கள், முதியோர், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பாலக்காடு - சென்னை, திருச்செந்துார் ரயில்களில், விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் பல முறை ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள், பயணியர் நலன் கருதி, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் நீண்ட காலமாக நிலவி வரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.