சர்க்கரைப்பாளையத்தில் 12,500 சவுக்கு கன்று நடவு
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், முத்துார் அடுத்துள்ள சர்க்கரைப்பாளையத்தில், சவுக்கு மரங்கள் உட்பட, 12 ஆயிரத்து, 620 மரக்கன்றுகள் நடப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டத்தில் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியில் உள்ள, இளம் பசுமை அமைப்புகளுடன் கரம் கோர்த்து, வெற்றி அறக்கட்டளை, பசுமைப்பணியை பரவலாக செய்து வருகிறது. விவசாய நிலங்களில், பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வளர்க்க, விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இத்திட்டத்தில் இதுவரை, 1.86 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முத்துார் அடுத்துள்ள சர்க்கரைப்பாளையத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான, பழனிகாட்டு தோட்டத்தில், 12 ஆயிரத்து, 500 சவுக்கு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. மேலும், மகோகனி, 120 உட்பட, 12 ஆயிரத்து, 620 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. நில உரிமையாளர் குடும்பத்தினர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.