பிருத்வி நிறுவனத்தில் மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை அவயம் வழங்கல்
திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி,'சக் ஷம்' சார்பில்,பிருத்வி ஆடை நிறுவனத்தில் நடைபெற்றது.திருப்பூர் மாவட்ட 'சக்ஷம்' அமைப்பின் தொடர் நிகழ்ச்சியாக, மாற்றுத் திறனாளர்களுக்கு இலவசமாக செயற்கை கால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அளவீடு செய்து கொண்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 17 மாற்றுத்திறனாளர்களுக்கு, 1.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மங்கலம் அருகே சுல்தான்பேட்டையிலுள்ள பிருத்வி ஆடை உற்பத்தி நிறுவன வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, 'சக்ஷம்' மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வம், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உபகரணங்களுக்கான நிதியை, பிருத்வி ஆடை நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணர்வு நிதியில் இருந்து, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாலன், இயக்குனர் பூங்கொடி ஆகியோர் வழங்கினர். அத்துடன் பல்லடம் பகுதியைச் சேர்ந்த கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட, ஏழு வயது சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கென, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சக்ஷம் நிர்வாகிகள் மற்றும் பிருத்வி நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.