பிற மத நம்பிக்கையை மதிப்பது நம் மண்ணின் கலாசாரம் வேலுார் இப்ராஹிம் பேச்சு
பொங்கலுார்; வலசுபாளையம் ஸ்ரீ ஜெய் சக்தி ஞான விநாயகர் கோவிலில் உலகில் அமைதி நிலவவும், வன்முறை, தீவிரவாதம் போர்களற்ற புதுயுகம் உருவாகவும், அனைத்து மக்களும் நலம் பெற வேண்டி பிரித்தியங்கிரா தேவி நிகும்பலா மஹாயாகம், கூட்டுப் பிரார்த்தனை, ஞான வேள்வி, மூத்தோர் ஆதரவு சரணாலயம் துவக்க விழா நடந்தது. யாகத்தில், 1108 சிவனடியார்கள் சங்கல்பம், 108 மூலிகைகள், 108 மூட்டை மிளகாய் சமர்ப்பனம் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க., தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் பேசியதாவது:நாம் எல்லோரும் வேற்று மதங்களாக இருக்கலாம். ஆனால், நாம் பாரதத்தாயின் குழந்தைகள். இந்த நோக்கமே நம் எல்லோரையும் ஒருங்கிணைக்கச் செய்கிறது. உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு காட்சியை பார்க்க முடியாது. எல்லா மதங்களில் உள்ளவர்களும் ஒன்றிணைந்து ஒரு மதத்தின் நம்பிக்கையை பெருமைப்படுத்துவது, மதிப்பது இந்த மண்ணின் கலாச்சாரம். இந்த மண்ணில் பிறந்தவர்களால் மட்டும் தான் அதைச் செய்ய முடியும்.உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஓர் ஒற்றுமையை பார்க்க முடியாது. யாகம் என்பது ஆன்மீகமாக மட்டுமல்ல தேசத்தை பாதுகாக்கும் நம் ராணுவ வீரர்களுக்கு கூடுதல் பலத்தை தரும். தேசத்தை அழிக்க நினைக்கிற தீய சக்திகள் அழிந்து போவதற்காகவும், இந்த தேசத்தில் மழை தேவையான அளவு பெய்யவும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் நடத்தப்படுகிறது. இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் தான் ஆத்மா திருப்தி கிடைக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, தெய்வ சிகாமணி சுவாமிகள் பேசுகையில், ''கடவுள் என்பதற்கு என்ன வரையறை உள்ளது. பல கடவுளை வணங்குகிறோம். உலகில் அனைத்தையும் படைத்தவர், காப்பாற்றுபவர் கடவுள் என எல்லா மதங்களும் சொல்லும் வரையறை. உங்களை படைத்த உங்களது பெற்றோர் உங்களுக்கு கடவுளாகின்றனர். உலகில் உள்ள அனைத்தையும் மனிதர்கள் படைத்துள்ளனர். மனிதர் இல்லை என்றால் கடவுள்களே இருக்க முடியாது. தர்மத்திற்கு புறம்பாக செயல்படுபவர் அழிவர்,'' என்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், சிவசேனா மாநில துணைத்தலைவர் சசிகுமார், பாசன சபை தலைவர் கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.