உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல் சாகுபடி பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப மேலாண்மை வேளாண் துறை அறிவுறுத்தல்

நெல் சாகுபடி பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப மேலாண்மை வேளாண் துறை அறிவுறுத்தல்

உடுமலை; நெல் சாகுபடியில், பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப மேலாண்மை குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:மடத்துக்குளம் வட்டாரத்தில், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளான குமரலிங்கம், பாப்பான்குளம், அக்ராகார கண்ணாடிப்புத்துார், வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி, காரத்தொழுவு ஆகிய வருவாய் கிராமங்களில், 1,500 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.மேலும், அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் அமைக்கும் பணிகள் துவங்கி, நடவுப்பணிகளுக்கு தயாராக உள்ளது.நெற்பயிரில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப மேலாண்மை குறித்து, மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் விதைப்பு பணியின் போது, விதை நேர்த்திக்கு பைரோகுளின், 2 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல், 2 கிராம் அல்லது பாசில்லஸ் சப்டிலீஸ், 10 கிராம் ஆகியவை, ஒரு கிலோ விதைக்கு, விதைநேர்த்தி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்வதால், மண் மற்றும் பூஞ்சாண நோயிலிருந்து நாற்றுகள் நன்கு வேர் பிடிப்புடன் வளரும்.அதே போல், நடவு முன்பு ஒரு ஏக்கருக்கு வேப்பம்புண்ணாக்கு, 50 கிலோ அடியுரத்துடன் கலந்து உழவு செய்ய வேண்டும்.நடவுக்குப்பிறகு, நெற்பயிருக்கு மேலுரமாக, ஒரு ஏக்கருக்கு, யூரியா ஒரு மூட்டை மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் ஒரு மூட்டை என்ற அளவில் அளிக்க வேண்டும்.பின்பு நுண்ணுாட்ட கலவை ஏக்கருக்கு, 5 கிலோ பயன்படுத்தினால், பயிர்களில் அதிக மணிப்பிடிப்புடன், நல்ல வளர்ச்சி ஏற்படுகிறது.மேலும், நடவு செய்த 30 நாட்களுக்கு பின், ஒரு ஏக்கருக்கு, ஜிங்க் சல்பேட் உரம், 10 கிலோ அளித்தால், அதிகளவு துார் பிடித்தல் உண்டாகி அதிக மகசூலை அளிக்கிறது.மேலும், தண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, அதிகப்படியான தழைச்சத்து உரங்கள் வழங்குவதை குறைத்து, பரிந்துரைக்கப்பட்ட உரங்களை அளிக்க வேண்டும்.மருந்துகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டுமே, பயிர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை