செந்துாரம், பங்கனப்பள்ளி ஒசூரில் இருந்து குவிந்தன
திருப்பூர் : திருப்பூரில் விற்பனைக்காக, செந்துாரம் மற்றும் பங்கனப்பள்ளி மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.திருப்பூரில் உள்ள கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில், ஒவ்வொரு சீசனுக்கு வரும் பழங்களை வாங்கி, வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக, தர்பூசணி விற்கப்பட்டது. கடந்த வாரத்தில் இருந்து, பலாப்பழம் வரத்து துவங்கியது.கோடைக்காலம் துவங்கியதும் விற்பனைக்கு வரவேண்டிய மாம்பழம் வரத்து குறைவாகவே இருந்தது. சித்திரை மாதம் பிறந்த பின், மாம்பழம் வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.நேற்று, ஒசூர் பகுதியில் இருந்து, செந்துாரம் மற்றும் பங்கனப்பள்ளி மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது.மாம்பழ வியாபாரிகள் கூறுகையில், 'இந்தாண்டு மாம்பழ வரத்து தாமதமாகிவிட்டது. சுவையான செந்துாரம் மற்றும் பங்கனப்பள்ளி மாம்பழங்கள், கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு மாம்பழமாக சரிபார்த்து வாங்கி செல்கின்றனர்,' என்றனர்.