இரு வழிச்சாலையில் மையத்தடுப்புகள் இல்லாததால் மாணவர்கள் பாதிப்பு
உடுமலை; உடுமலை - பழநி ரோட்டில் மையத்தடுப்புகள் அமைக்காததால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர். உடுமலை, பழநி ரோட்டில், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் ஏராளமாக உள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் ரோட்டை கடக்க வேண்டிய நிலை உள்ளது. அதே போல், நகர எல்லையில், அண்ணா குடியிருப்பு உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகளும் அமைந்துள்ளன. நகரின் பிரதான ரோடுகளில் மையத்தடுப்புகள், அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர் குடியிருப்புகள் அமைந்துள்ளன. பழநி ரோட்டில் கொழுமம் ரோடு பிரிவு வரை மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், பெரிய கோட்டை பிரிவு பகுதியிலும், மையத்தடுப்புகள், வேகத்தடைகள் அமைந்துள்ளன. ஆனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரோட்டில், மையத்தடுப்புகள் இல்லாததால், இரு வழிச்சாலையில், அதி வேகமாக, வரும் வாகனங்களால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ரோட்டை கடக்க முடியாமல், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த ரோட்டில் மையத்தடுப்புகள் அமைக்கவும், பள்ளி, கல்லுாரி பகுதியில் வேகத்தடை அமைக்கவும் வேண்டும்.