ஓணம் சீசனுக்கு பொரியல் தட்டை சாகுபடி இலக்கு
உடுமலை; ஓணம் சீசனை இலக்காக வைத்து, பொரியல் தட்டை சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து, நடவுப்பணிகளை மேற்கொள்கின்றனர். அவ்வகையில், கேரளாவில், பொரியல் தட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, குறைந்த தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில், இச்சாகுபடியை ஆண்டு முழுவதும் மேற்கொள்கின்றனர். விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் விளையும் பொரியல் தட்டை, கேரள மாநிலம், பாலக்காடு, மூணாறு, மறையூர் போன்ற பகுதிகளுக்கு, அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நடவு செய்து, செடிகளுக்கு, 50 நாட்கள் ஆன பிறகு, காய்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு சராசரியாக, 100 முதல் 150 கிலோ வரை, ஒரு பறிப்பில் கிடைக்கும். கடந்தாண்டு, போதிய விலை கிடைக்கவில்லை. ஓணம் பண்டிகை சீசனில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரி வித்தனர்.