டீமா உறுப்பினர்கள் வேலைநிறுத்தம்
திருப்பூர்,; திருப்பூர் அனைத்து வணிகர் சங்க பேரவை சார்பில் நடந்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்(டீமா), ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது.அதன்படி, சங்க உறுப்பினர்களின் பின்னலாடை நிறுவனங்கள் நேற்று இயங்கவில்லை. தொழிலாளருக்கு விடுமுறை அளித்ததால் நேற்று முழுவதும், இதன் உறுப்பினர்களுக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கவில்லை.'டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறுகையில்,''மின் கட்டண உயர்வையே சமாளிக்க முடியாமல், தொழில் சிரமத்தில் இருக்கிறது. சொத்துவரி உயர்வதும், 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பதும் கடும் சுமையை ஏற்படுத்தும். இதேநிலை தொடர்ந்தால், குறு, சிறு நிறுவனங்கள் தொழிலில் தொடர முடியாத நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு தலையிட்டு, சொத்துவரி உயர்வை திரும்ப பெறவும், மின் கட்டணத்தை குறைக்கவும், 18 சதவீத ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை நிறுத்தி வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். ---கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமும்(டீமா) ஆதரவு தெரிவித்தது. காங்கயம் ரோடு, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள 'டீமா' உறுப்பினருக்கு சொந்தமான ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணிகள் நேற்று நடைபெறவில்லை.
துணை முதல்வர் சந்திப்பாரா?
திருப்பூர் வரும் துணை முதல்வர் உதயநிதி, ''பின்னலாடைத் தொழில்துறையினரை சந்திக்க வேண்டும். அனைத்து பின்னலாடைத் தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழிலின் உண்மையை நிலையை கேட்டறிந்து, அதற்கு தகுந்தாற்போல், தொழில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க, துணை முதல்வர் முன்வர வேண்டும்'' என, அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.