தற்காலிக இரவு காவலர்கள் பள்ளிகளில் நியமிக்கணும்
உடுமலை; அரசுப்பள்ளிகளில், உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் இரவுக்காவலர்கள் நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அரசால் செய்யப்பட்டு வருகின்றன.கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளில், பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில், நுாற்றுக்கும் அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், இரவுக்காவலர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், பள்ளியின் பாதுகாப்புக்கும் எந்த உறுதியும் இல்லாத நிலைதான் தொடர்கிறது. சில பள்ளிகளில், நிர்வாகத்தினர் தற்காலிகமாக இரவுக்காவலர்களை நியமித்துள்ளனர். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் இந்நிலை சாத்தியமில்லாமல் உள்ளது.அரசுப்பள்ளிகளில் தற்போது, உயர்ரக தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக மாறிவருகிறது. ஆனால், அனைத்தும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில், இடைவெளியில் மாணவர்கள் வெளியில் சென்று வந்தாலும், ஆசிரியர்களால் கண்காணிக்க முடிவதில்லை.இதனால் தற்காலிமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில், உள்ளாட்சி துறைகளின் வாயிலாக, இரவுக்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த விஷயத்தில், தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.