உடுமலை;ஏழு குள பாசன திட்ட குளங்களில், கழிவு நீர் கலப்பு ஆகாயதாமரை செடி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ளது.உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்திலுள்ள குளங்கள் வாயிலாக, 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் சாகுபடிக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளங்கள் உள்ளன.திருமூர்த்தி அணையிலிருந்து, இக்குளங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. மீன் வளர்ப்பு வாயிலாக, குளங்களிலிருந்து பொதுப்பணித்துறைக்கு வருவாயும் கிடைத்து வருகிறது.இந்நிலையில், சில குளங்களில், அருகிலுள்ள குடியிருப்புகளின், கழிவு நீர் நேரடியாக கலப்பதால், பல்வேறு பிரச்னைகள், ஏற்பட்டு வருகிறது. தற்போது சில குளங்களில், தண்ணீர் மாசடைந்து, பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. பெரியகுளம், செங்குளம் உட்பட அனைத்து குளங்களிலும், ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து வருகின்றன.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: நீர் நிலைகளில், பரவும், ஆகாய தாமரைச்செடிகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இச்செடிகளில், கோடை காலத்தில், இலைகளின் வழியாக நீராவிப்போக்கு அதிகளவு இருக்கும்.இதனால், குளத்தில், நீர்மட்டம் வேகமாக குறையும். சூரிய ஒளி தண்ணீரில் ஊடுருவ தடையாக இருப்பதால், நீர் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சியை தடுக்கும்.இத்தாவரம் இறந்து மட்கும் போது, தண்ணீர் மாசடையும். கொசுக்கள் உற்பத்திக்கு நல்ல சூழ்நிலையை இச்செடிகள் ஏற்படுத்திக்கொடுக்கின்றன. எனவே, இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.இதே போல், கழிவு நீர், நேரடியாக குளங்களில் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது. நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு பொதுப்பணித்துறையினரும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்காமல், இருப்பது அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.