உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம் ஓங்கி ஒலித்த ஓம் சக்தி பராசக்தி கோஷம்  முத்தணம்பாளையத்தில் பக்திப்பெருக்கு

ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம் ஓங்கி ஒலித்த ஓம் சக்தி பராசக்தி கோஷம்  முத்தணம்பாளையத்தில் பக்திப்பெருக்கு

திருப்பூர்,; சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் முழங்க, பக்தர்களின், 'ஓம் சக்தி பராசக்தி' கோஷத்துடன், முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.வெள்ளை கற்களே இல்லாத கொங்கு நாட்டில், அவிநாசி மற்றும் முத்தனுாருக்கு அடுத்தபடியாக, உயரமான வெண்ணிற கற்களால் வடிவமைக்கப்பட்ட, 30 அடி உயர தீப ஸ்தம்பம் இருப்பது, திருப்பூர், முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் மட்டுமே. கோவில் பிரகாரங்கள், மஹா மண்டபம் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், பழமையான வெண்ணிற கற்களால், நீராழி சூழ, கருவறையும், அர்த்த மண்டபமும், முன்மண்டபமும் எழிலுடன் அமைந்துள்ளது. கொங்கு நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையானதும், நவசக்தி பீடங்களில் ஏழாவது பீடமாகவும் உள்ளது.பரிவார தெய்வங்களுக்கு தனி கருங்கல் சன்னதி அமைத்தும், பிரகாரம் முழுவதும் கருங்கல்லால் தளம் அமைத்தும் திருப்பணி நடந்தது; நேற்று கும்பாபிேஷக விழா கோலாகலமாக நடந்தது. ஸ்ரீஅங்காளம்மன், முத்துவிநாயகர், விநாயகர், முருகர், பேச்சியம்மன், கருப்பணசுவாமி, பாவாடைராயன், காத்தவராயன், இருளப்பன், அகோர வீரபத்ர சாமி, பேமசரி, நாகர், புரவையம்மன், கவுண்டச்சியம்மன், உடையாரம்மன், முத்துக்குமாரசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும். புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.

விமரிசையாக நடந்தகும்பாபிேஷக பூஜைகள்

கடந்த 1ம் தேதி கும்பாபிேஷக பூஜைகள் விமரிசையாக துவங்கின. மேளதாளத்துடன் முளைப்பாலிகை ஊர்வலம், வேள்விபூஜைகள் வேதாகம முறைப்படி நடந்தது. கபிலர் மலை செல்வ கபில சிவாச்சார்யார் குழுவினர் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர். தேவார இசை ஓதுவார்மூர்த்தி பாலசுப்பிரமணியம் குழுவினர், சந்திரசேகரன் குழுவினரின் நாதஸ்வரம், மதுரை வானொலி அறிவிப்பாளர் மீனாட்சி ராமச்சந்திரன் மற்றும் பொள்ளாச்சி வரதராஜனின், நேரடி வர்ணனையுடன் விழா விமரிசையாக நடந்தது.அதிகாலை துவங்கிய, ஆறாம் கால வேள்வி பூஜை, 5:15 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து, புனித கலசங்கள், யாகசாலையில் இருந்து புறப்பாடாகின. காலை, 5:30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கும், தொடர்ந்து மூலாலய மூர்த்திகளுக்கும் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிேஷகம், தசதானம், தசதரிசனம், கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது.விழாவில், மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் சாமிநாதன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், மேயர் தினேஷ்குமார், திருப்பணிக் குழுவினர், கும்பாபிஷேக விழாக்குழுவினர், அறங்காவலர்கள், அறநிலையத்துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழு மற்றும் திருப்பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை