உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி: ஜி.வி.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி: ஜி.வி.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

உடுமலை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்புக்கான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் மெகா வினாடி-வினா போட்டி, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் நாள்தோறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை மேம்படுத்தும் வகையில், கடந்த, 2018 முதல் 'மெகா வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ- ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.நேற்று பள்ளியில் நடந்த இப்போட்டியில், முதல் சுற்றில், 65 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை 'ஈ' அணியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவியர் ரித்திகா, வர்ஷினி ஆகியோர் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் கவிப்பரியா, பள்ளி நிர்வாக அலுவலர் சதீஸ்குமார், ஒருங்கிணைப்பாளர் பர்வின்பாத்திமா, பள்ளி அலுவலர் முத்துலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

தகவல் பரிசுபெட்டகம்

பள்ளி முதல்வர் கவிப்பிரியா கூறியதாவது:மாணவர்கள் எளிமையாக தமிழ் வாசிப்பதற்கு, 'பட்டம்' இதழ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதில் இருக்கும் சிறுசிறு தகவல்களை மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கின்றனர்.நாள்தோறும் வகுப்பில் மாணவர்களை இந்த இதழை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றுகிறோம். பட்டம் தொடர்பாக, பள்ளியின் சார்பிலும் போட்டிகள் வைத்து மாணவர்களை ஊக்குவிக்கின்றோம். இன்றைய சூழலில் இது போன்ற இதழ் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த தகவல் பரிசு பெட்டகம். நடப்பு தகவல்களையும் மாணவர்கள் இதன் மூலம் அறிந்துகொள்வதால், அவர்களுக்கு வாசிப்பின் மீதும் விருப்பம் ஏற்படுகிறது.இவ்வாறு கூறினார்.

நம்பிக்கை ஏற்படுகிறது

மாணவி ரித்திகா: ஒவ்வொரு முறையும் பட்டம் இதழ் வாசிக்கும்போது ஆர்வம் அதிகரிக்கிறது. பல அறிய தகவல்களை எளிமையாக அறிந்துகொள்வதற்கான ஒரு இதழாக உள்ளது. இதை வாசிப்பதால், தற்போது நுாலக புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் ஏற்படுகிறது. அதேபோல் அதில் வரும் தகவல்களை பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதால், அவர்களுக்கும் இதன் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சிந்தனைகளை துாண்டுகிறது

மாணவி வர்ஷினி: பட்டம் இதழில் வழங்கப்படும் தகவல்கள் எங்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் உள்ளது. அதில் வழங்கப்படும் தகவல்கள் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தை துாண்டுகிறது. இதனால் படிப்பிலும், திறம்பட செயல்பட முடிகிறது. பட்டம் வினாடி-வினா போட்டியும், எங்களின் திறன்களை அளவிடுவதற்கான அளவுகோலாக உள்ளது. கட்டாயம் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு தயாராவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை