உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நிரம்பும் தருவாயில் திருமூர்த்தி அணை : முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

 நிரம்பும் தருவாயில் திருமூர்த்தி அணை : முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை, பி.ஏ,பி., திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றாக உள்ளது. திருமூர்த்தி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று, மாலை நிலவரப்படி மொத்தமுள்ள, 60 அடியில், 51.90 அடி நீர்மட்டம் உள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அணை விரைவில் நிரம்பி, உபரி நீர் பாலாற்றில் திறக்கப்படும் வாய்ப்புள்ளதால், பாலாற்றின் வழியோரத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, நீர் வளத்துறை சார்பில், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையில் துவங்கும் பாலாறு, ஆழியாற்றில் கலந்து, கேரளா மாநிலத்திலுள்ள பாரதப்புழா ஆற்றில் இணைகிறது. இதனால், நீர் வளத்துறை சார்பில், தமிழக, கேரளா மாநிலம் வழியாக பயணிக்கும் ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணை, கடந்த, 2021 டிச., 10ம் தேதி நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நான்கு ஆண்டுக்கு பின், தற்போது அணை நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். அருவிக்கு 3வது நாளாக தடை திருமூர்த்திமலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ