உலக ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு தயாராகும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
'ஸ் டார்ட் அப் - 2025' க்கான, உலக 'ஸ்டார்ட் அப்' உச்சி மாநாடு, அடுத்த மாதம், 9 மற்றும், 10 தேதிகளில் கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைக்க உள்ளார். மாநாட்டுக்கு முன்னேற்பாடாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 'ரோடு ேஷா' நடத்தப்பட்டது. அதில், சங்க இணை செயலர் ஆனந்த் பேசியதாவது: தமிழகத்தில், 12 ஆயிரம் 'ஸ்டார்ட் அப்'கள் செயல்படுகின்றன. 2032ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் 'ஸ்டார்ட் அப்' உருவாக்கும் இலக்கை, அரசு நிர்ணயித்திருக்கிறது. திருப்பூரில், புதிதாக உருவான 'ஸ்டார்ட் அப்'கள் வாயிலாக, கடந்த ஐந்தாண்டில், 200 முதல், 250 கோடி ரூபாய் வரையிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பூஜ்யம் கழிவுநீர் சுத்திரிகரிப்பு, வளம் குன்றா வளர்ச்சி நிலை சார்ந்த உற்பத்தி திறன்களை காட்சிப்படுத்தும் விதமாக, மாநாட்டில் ஒரு இடம் ஒதுக்க வேண்டும். திருப்பூரின் தொடர்ச்சியான வளர்ச்சியை உலகளாவிய சந்தையில் பிரசாரம் செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமையும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, துணை தலைவர் பொன்னி வேல்முருகன் பேசுகையில், ''இந்த மாநாடு தொழில் முனைவோருக்கான சவால்களை தீர்க்கும் நோக்குடன், கண்டுபிடிப்பு மற்றும் புதுமையில் கவனம் செலுத்துவதாக இருக்கும். 150க்கும் மேற்பட்ட சர்வதேச 'ஸ்டார்ட் அப்' பங்கேற்பாளர்கள், 160க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள், 750 அங்காடிகள் மற்றும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பர். மேலும், உயர்தர தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் அறிவு மேம்பாடு வாய்ப்புகளும் இடம் பெறவுள்ளன,'' என்றார். மாநாட்டில், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, சோஹோ போன்ற முன்னணி நிறுவனங்கள் வழங்கும் 'மாஸ்டர் கிளாஸ்' வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர் மேழிச்செல்வன் நன்றி கூறினார்.