உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே கேட் பகுதியில் நிரந்தரமானது வாகன நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்

ரயில்வே கேட் பகுதியில் நிரந்தரமானது வாகன நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்

உடுமலை; உடுமலை ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில், ரோடுகளை அகலப்படுத்தி, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.உடுமலை நகரை இரண்டாக பிரிக்கும் வகையில், ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. நகரின் தெற்கு பகுதியில், ராமசாமிநகர், அன்னபூரணி நகர், செளதாமலர் லே-அவுட், ருத்ரப்பநகர், கங்காதரம் லே-அவுட், தில்லை நகர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.மேலும், அரசு கல்லுாரி, ஐ.டி.ஐ., வட்டார போக்குவரத்து அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் என ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. எலையமுத்துார், கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு செல்லும் பிரதான வழித்தடமாகவும் உள்ளதால், மணிக்கு சராசரியாக, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ரோட்டை கடக்கின்றன.ரயில்வே கேட் பகுதியில், ரோடு குறுகலாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. இந்த ரோட்டில், இரு புறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகராட்சி மற்றும் ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் ரோட்டை அகலப்படுத்த வேண்டும். குறுகலாக உள்ள பகுதி மற்றும் திருப்பத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.அதே போல், ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே உள்ள நிலையில், அதிகளவு ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதால், ரயில்வே கேட் மூடப்படும் போது, இரு புறமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும் நிலையும் உள்ளது. இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரித்து வரும் நிலையில், ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில், மேம்பாலம் அமைக்கவும், இரு புறமும் ரோட்டை அகலப்படுத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !