திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் விட்டு இறங்கும் பயணிகள் ஆபத்தை உணராமல் அப்படியே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். ரயில்வே போலீசார், ஆர்.பி.எப்., அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.கோவை - ஈரோடு வழித்தடத்தில் வழியோர ஸ்டேஷனாக திருப்பூர் உள்ளது. சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களை விட, பாசஞ்சர் ரயில்களில் அதிகளவில் பயணிகள் தினமும் வந்திறங்குகின்றனர். மாலையில் திரும்ப ரயில் ஏறி வீடு திரும்புகின்றனர்.கோவை - நாகர்கோவில், ஈரோடு - கோவை, பாலக்காடு டவுன் - திருச்சி, ஈரோடு - பாலக்காடு பாசஞ்சர்கள் திருப்பூரில் நின்று பயணிக்கிறது. காலை, மாலை பீக்ஹவர்ஸில் இந்த ரயிலில் வருபவர்கள் பிளாட்பார்மில் இறங்கி, ஸ்டேஷனை விட்டு வெளியேறாமல், ரயில் நின்ற பின், எதிர்முனையில் தண்டவாளத்தை (மெயின்லைன்) கடந்து, பிளாட்பார்மில் ஏற முற்படுகின்றனர்.இந்நேரத்தில் திருப்பூரில் நிற்காமல் செல்லும் ரயில்கள் அல்லது சரக்கு ரயில்கள் வேகமாக கடந்து செல்ல முற்பட்டால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. பயணிகள் இவ்வாறு ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வதை ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.,) கண்டும், நடவடிக்கை எடுக்காமல், ஒரு எச்சரிக்கை கூட விடுக்காமல் உள்ளனர்.----திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பாசஞ்சர் ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
தண்டவாளத்தை
கடக்க முயன்றவர் காயம்பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் நிஜாம்அன்சாரி, 23. தனது உறவினர்களை ரயிலில் வழியனுப்பி வைக்க வந்துள்ளார். உடன் வந்தவர் ரயிலில் புறப்பட்ட பின், ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பார்மில் இருந்து முதல் பிளாட்பார்ம் நோக்கி, தண்டவாளத்தில் இறங்கி ஓடி கடக்க முயன்றுள்ளார்.சரக்கு ரயில் நின்று கொண்டிருக்க, கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சபரி எக்ஸ்பிரஸ் அவர் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.