வெட்டிச் சாய்க்கப்படும் மரங்கள்; அவிநாசியில் தொடரும் அவலம்
அவிநாசி; அவிநாசியில் வேருடன் மரங்கள் வெட்டிச்சாய்க்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது.கடந்த மூன்று நாள் முன்பு, அவிநாசி பேரூராட்சி, முதல் வார்டு, காமராஜ் நகர் பகுதியில், 30 ஆண்டு வயதுடைய, 4 வேப்ப மரங்கள் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டன; கடந்த ஆண்டு, 11வது வார்டில் ரிசர்வ் சைட்டில் உள்ள ஐந்து மரங்கள் அடியோடு வெட்டப்பட்டன.மின் கம்பிகளில் உரசுவதாக கூறி சாலையோர மரங்கள் பலவும் அடிக்கடி வெட்டப்படுகின்றன. நேற்று ரங்கநாதபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள 40 ஆண்டுக்கும் மேலான மரம் வெட்டி சாய்க்கப்பட்டது. மரங்கள், மனித வாழ்வின் வரங்கள் என்பதை உணராமல், அவிநாசியில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவது இயற்கை ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.'நல்லது நண்பர்கள்' அறக்கட்டளை ரவிக்குமார் கூறுகையில், ''மரங்களை வெட்டுவதற்கு பதில் மறு நடவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கலாம். பத்து ஆண்டுகளுக்கு மேலான ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன், முடிந்தளவு அதே பகுதியிலோ, வேறு இடத்திலோ 10 மரக்கன்றுகளை நட்டு ஒரு ஆண்டு பராமரித்து நன்கு வளர்ந்த பின்பே, குறிப்பிட்ட மரத்தை வெட்ட வேண்டும் என புதிய சட்டம் இயற்ற வேண்டும்.பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், மரத்தை வெட்டுபவர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அவிநாசி பகுதியில் தொடர்ந்து மரத்தை வெட்டுவது ஆளுங்கட்சியின் கவுன்சிலர்களே அதில் ஈடுபடுவது பொதுமக்களிடையே அதிருப்தியை வரவழைத்துள்ளது'' என்றார்.
அனுமதி பெறவில்லை
மரங்கள் வெட்டியது குறித்து தெரியாது.மரங்களை வெட்ட அனுமதி பெறப்படவில்லை. எதற்காக வெட்டினார்கள் என விசாரித்து கூறுகிறேன்.- சண்முகம், செயல் அலுவலர், அவிநாசி பேரூராட்சி