உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமெரிக்க வரிவிதிப்பு; தீர்வு கிடைக்குமா? அச்சாரமிடும் பஞ்சு இறக்குமதி வரிவிலக்கு

அமெரிக்க வரிவிதிப்பு; தீர்வு கிடைக்குமா? அச்சாரமிடும் பஞ்சு இறக்குமதி வரிவிலக்கு

திருப்பூர்; ''பருத்தி - பஞ்சு இறக்குமதிக்கான வரி விலக்கு அளித்துள்ளதன் வாயிலாக, உள்நாட்டு ஜவுளி தொழில் பயன்பெறுவதுடன், அமெரிக்காவின் வரி விதிப்பு குழப்பத்துக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்'' என்று தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய நிதி அமைச்சகம், பஞ்சு இறக்குமதிக்கான வரி, 11 சதவீதத்தை, செப்., 30 வரை ரத்து செய்துள்ளது. உள்நாட்டு பஞ்சு உற்பத்தி குறைந்துள்ளதால், பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச பஞ்சு விலையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பஞ்சு விலை, 8 சதவீதம் வரை அதிகமாக இருந்து வருகிறது; சில மாதங்களாக, இத்தகைய இடைவெளி குறைந்துள்ளது. பஞ்சு இறக்குமதிக்கு, 11 சதவீதம் வரிவிதிக்கப்பட்டு வந்ததால், இறக்குமதி பஞ்சு விலை மென்மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்தது. வரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், 11 சதவீத வரிச்சலுகையுடன், பஞ்சு இறக்குமதி செய்யலாமென, நுாற்பாலைகள் களமிறங்கியுள்ளன. நுால் விலை குறைய வாய்ப்பு பருத்தி சீசன் துவங்குவதற்கு முன் சிறிய தட்டுப்பாடு ஏற்படும்; இதனால், பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வதும் வழக்கமானது. இந்நிலையில், 11 சதவீத இறக்குமதி வரி தற்காலிகமாக சலுகை அளித்துள்ளதால், பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது; நுால் விலை சற்று குறையவும் வாய்ப்புள்ளதாக, பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு பிரச்னை மட்டுமின்றி; அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கும் இது தீர்வாக அமையும் என்பதே திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: எந்தவொரு நாடும், இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சிக்கும். அதன்படியே, அமெரிக்காவும் செய்து வருகிறது. இந்நிலையில், பஞ்சு இறக்குமதிக்கான வரியை, மத்திய அரசு தற்காலிகமாக நீக்கியுள்ளது. இது, அமெரிக்க வரி உயர்வு குழப்பத்துக்கும் தீர்வாக அமையும். இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், அமெரிக்காவின் 'பீமா' பருத்தியை அதிகம் இறக்குமதி செய்வர். வரிவிலக்கு வழங்கியுள்ளதால், அமெரிக்க பஞ்சு ஏற்றுமதியும் அதிகரிக்கும்; இதுவும், இறக்குமதி வரி விவகாரத்தில் சுமூக தீர்வாக அமையும். வரும், 27ம் தேதி முதல் அமெரிக்காவின் வரி உயர்வு அமலாகும் என்று முன் அறிவித்திருந்தனர். இருப்பினும், தள்ளிப்போகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அக்., 31 வரை சலுகை அவசியம்: 'சைமா'

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: பருத்தி சீசன் அக்., மாதம் துவங்கினாலும், இயற்கை சூழல் நன்றாக இருந்தால் தான், மாத இறுதியில் பருத்தி வரத்து துவங்கும்; மழை இருந்தால், மேலும் சில வாரம் தாமதமாகும். கோடைக்கால ஆர்டர்கள் மீது உற்பத்தியை துவக்க, நுால் கொள்முதல் அதிகரிக்கும். அதற்காக, பஞ்சு இருப்பு அவசியம். சீசன் முடியும் போது, தட்டுப்பாடு ஏற்படும் என்று கணக்கிட்டுத்தான், பல மாதங்களாக, இறக்குமதி வரியை நீக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தோம். அமெரிக்காவுடன், வரி விதிப்பு குழப்பம் நீடிப்பதால், இந்நேரத்தில் மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை நீக்கியுள்ளது; இது மிகச்சரியான நடவடிக்கை.இருப்பினும், செப்., 30 வரை அளிக்கப்பட்ட வரி விலக்கு சலுகையை, அக்., மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். குறுகிய காலத்தில், தரமான பஞ்சை பார்த்து இறக்குமதி செய்ய போதிய அவகாசம் இருக்காது. இறக்குமதி வரி ரத்து சலுகை, உண்மையாக, உற்பத்தியாளருக்கு பயனளிக்க வேண்டுமெனில், அக்., 31ம் தேதி வரை இச்சலுகையை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். --- ஈஸ்வரன் படம் வைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை