- நிருபர் குழு -: உடுமலை பகுதிகளிலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 20ம் தேதி துவங்கி, பகல் பத்து உற்சவ விழாக்கள் நடந்து வந்தன. தினமும், எம்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், திருப்பல்லாண்டு, திருமொழி பாசுரங்கள் சேவை மற்றும் சிறப்பு அலங்காரம், தினமும் ஒவ்வொரு அவதாரங்களில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். * பெரிய கடை வீதி, நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவில், 10வது நாளான நேற்று, சுவாமிக்கு பல்வேறு திரவியங்களில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சீனிவாச பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. * நெல்லுக்கடை வீதி சவுந்தரராஜ பெருமாள் கோவில், உடுமலை திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவில், சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், அலமேலுமங்கா சீனிவாச பெருமாள், பிரசன்ன விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் சவுரிராஜ பெருமாள், கரட்டு மடம் சஞ்சீவி வீரராயபெருமாள் கோவில்களில், கொழுமம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், அடிவள்ளி வெங்கடேச பெருமாள் கோவில், கொங்கல் நகரம் கரிவரதராஜ பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடக்கிறது. தொடர்ந்து கருட வாகனத்தில் எம்பெருமாள் திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பொள்ளாச்சி * பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று அதிகாலை 4:30 மணி முதல் மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம் மற்றும் காலை, 5:00 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். * ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், இன்று காலை, 5:00 மணி முதல் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். * ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், நேற்று காலை திருமஞ்சன சேவை, அலங்கார சேவை, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை, 5:04 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, சிறப்பு அலங்காரம், பூஜைகள், மஹா தீபாராதனை, தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. நாளை மதியம், 1:40 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. * டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் நேற்று மாலை, 27 வகையான திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.