மாயமாகும் இரும்பு தகடு; கண்காணிப்பு அவசியம்
பல்லடம்: குளம் குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் மற்றும் கல் குவாரிகள், ஆபத்தான பள்ளங்கள் உள்ளிட்ட இடங்களில், நெடுஞ்சாலை துறை, ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றின் சார்பில், பாதுகாப்பு நடவடிக்கையாக இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டுகின்றன. சமீப நாட்களாக, சமூக விரோதிகள் சிலர், இது போன்ற இரும்பு தகடுகளை, சிலர் தேடி கண்டறிந்து, கழற்றி எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.பணிக்கம்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:செட்டிபாளையம் ரோட்டில் உள்ள எலந்த குட்டையை சுற்றிலும் இரும்பு தகடுகள் சமீபத்தில்தான் பொருத்தப்பட்டன. அதற்குள், யாரோ சிலர், இரும்பு தகடுகள் சிறிது சிறிதாக கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதே போல் நெடுஞ்சாலையின் பல இடங்களிலும் இரும்பு தகடுகள் மாயமாகியுள்ளன. எஞ்சியுள்ள தகடுகளையாவது காப்பாற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரும்பு தகடுகள் களவாடி செல்லும் நபர்களை கண்டறிந்து போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.