பஸ் ஸ்டாண்ட் அமையுங்க; கிராம மக்கள் எதிர்பார்ப்பு
உடுமலை; உடுமலை அருகே வளர்ந்து வரும் நகரமான கொமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், அங்கு தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநிக்கு, மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் வழித்தடம் அவசர காலங்களில் மாற்று வழித்தடமாகவும் பயன்பட்டு வருகிறது.இத்தடத்தில், கொமரலிங்கம் அப்பகுதியிலுள்ள கொழுமம், பாப்பம்பட்டி, உட்பட பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது.ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி வாகனங்கள் திணற வேண்டியதுள்ளது. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கொமரலிங்கத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.