இணைப்பு ரோட்டில் பாலம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு
உடுமலை, ; கிராம இணைப்பு ரோட்டில், ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் என கொங்கலக்குறிச்சி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஒன்றியம், ஆலாம்பாளையம் கிராமத்திலிருந்து பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சிக்கு, 3 கி.மீ., தொலைவுக்கு, இணைப்பு ரோடு உள்ளது.இந்த ரோட்டை கிராம மக்களும், பல்வேறு விளைபொருட்களை எடுத்துச்செல்ல விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.வழித்தடத்தில், பவளபுரம் என்ற குடியிருப்பும் அமைந்துள்ளது. இந்நிலையில், இணைப்பு ரோட்டில், குறுக்கிடும் மழை நீர் ஓடையில், மழைக்காலங்களில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது, இரு சக்கர வாகனங்கள் ஓடையை கடந்து செல்ல முடிவதில்லை.அப்போது, அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். ஆலாம்பாளையம் அல்லது மடத்துார் வழியாக, பல கி.மீ., துாரம் சுற்றி கொங்கலக்குறிச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. தொடர் மழைக்கு அவ்வழித்தடத்தில், பல வாரங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, தண்ணீர் தேங்கி நின்றது.எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையினர் அவ்விடத்தில் ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைக்க மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அரசும் இப்பிரச்னையில் தீர்வு காண வேண்டும்.