கூலி விவகாரம்; நாடா இல்லா தறிகள்: ஜன., 15 முதல் உற்பத்தி நிறுத்தம்
பல்லடம் : கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாடா இல்லா தறிகளை வரும் ஜனவரி 15 முதல் இயக்குவதில்லை என்று நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கம்(சிஸ்வா) முடிவெடுத்துள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராயர்பாளையத்தில் நேற்று நடந்த 'சிஸ்வா' ஆலோசனைக்கூட்டத்துக்கு பின், இதன் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:கோவை, திருப்பூர் மாவட்டங்களில், இயங்கி வரும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடா இல்லா தறிகள் மூலம், தினசரி 4 கோடி ரூபாய் மதிப்பிலான, 10 லட்சம் மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. மீட்டருக்கு, 4 முதல் 5 ரூபாய் வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை குறைத்துள்ளனர். மின் கட்டணம், பராமரிப்பு செலவு, வாடகை, ஆள் கூலி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்தாலும், கூலி மட்டும் குறைந்துள்ளது. அண்டை மாநிலங்களில், மின் கட்டணம் யூனிட்டுக்கு, 6 ஆகவும், தமிழகத்தில், 9 ரூபாயாகவும் உள்ளது. இந்த விலை வித்தியாசம் நேரடியாக அடக்க விலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. துணி உற்பத்தி பாதிக்கப்பட்டால், ஜவுளி உற்பத்தி சார்ந்துள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.மத்திய அரசு, பஞ்சு, விஸ்கோஸ் உள்ளிட்ட மூலப் பொருள் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் மானியங்களை போன்றே தமிழக அரசும் வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி தராவிட்டால், வரும் ஜன., 15 முதல், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் நாடா இல்லா தறிகளில் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவது என தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.