உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாலுகா தோறும் உழவர் சந்தை அமைப்பதாக சொன்னது என்னாச்சு! மடத்துக்குளம் விவசாயிகளுக்கு தொடர் ஏமாற்றம்

தாலுகா தோறும் உழவர் சந்தை அமைப்பதாக சொன்னது என்னாச்சு! மடத்துக்குளம் விவசாயிகளுக்கு தொடர் ஏமாற்றம்

மடத்துக்குளம்: தாலுகாவுக்கு ஒரு உழவர் சந்தை அமைக்கப்படும் என்ற அரசு அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மடத்துக்குளம் தாலுகாவில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு விவசாயிகள் பாதித்து வருகின்றனர். மடத்துக்குளம் தாலுகா கடந்த, 2009ல், உருவாக்கப்பட்டது. பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், விவசாயிகளுக்கான பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதில், உழவர் சந்தை முக்கியமானதாகும். மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசனம், பி.ஏ.பி., பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில், சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, மைவாடி உள்ளிட்ட பகுதிகளில், காய்கறிகளும், அனைத்து சீசன்களிலும், உற்பத்தி செய்யப்படுகிறது. அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருளை சந்தைப்படுத்த, உடுமலை தினசரி சந்தை, உழவர் சந்தை உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து, விளைபொருட்களை உடுமலைக்கு எடுத்து வர விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பிற சந்தைகளுக்கு அதிக செலவிட்டு காய்கறிகளை கொண்டு சென்றாலும் போதிய விலை கிடைப்பதில்லை. விளைநிலங்களிலேயே இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு காய்கறியை விற்பனை செய்வதால், நஷ்டம் ஏற்படுகிறது. மடத்துக்குளம், கொழுமம் உள்ளிட்ட பகுதிகளில், உள்ள வாரச்சந்தைகள் போதிய வசதிகள் இல்லாமல், செயல்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகளும், காய்கறி வாங்க வரும், மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசின் உழவர் சந்தையை மடத்துக்குளம் தாலுகாவில் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தாலுகாவுக்கு ஒரு வாரச்சந்தை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், மடத்துக்குளம் தாலுகாவில், உழவர் சந்தை அமைக்கப்படும் என அதிக எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் கண்டுகொள்வதில்லை அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: மடத்துக்குளத்தை தலைமையிடமாகக்கொண்டு சட்டசபை தொகுதி, தாலுகா உருவாக்கப்பட்ட போதும், எவ்வித மேம்பாட்டு திட்டங்களும் வரவில்லை. விவசாயிகள், பொதுமக்கள் என இரு தரப்பினரும், பயன்பெறும் வகையில் மடத்துக்குளத்தில், உழவர் சந்தை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். காய்கறி சாகுபடி பரப்பு அதிகமாக உள்ள பகுதியை தேர்வு செய்து, சந்தையை துவக்க வேண்டும். சந்தை இல்லாததால் விளைபொருட்களை சந்தைப்படுத்த திணற வேண்டியுள்ளது. இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல், உள்ளனர். ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள மடத்துக்குளம், கொழுமம், காரத்தொழுவு வாரச்சந்தைகளும் மேம்படுத்தப்படாமல், அனைத்து தரப்பினரும் பாதித்து வருகின்றனர். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினர் உழவர் சந்தை அமைப்பதற்கான கருத்துருவை சமர்ப்பித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ