17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு மருந்து கடைக்காரர், காதலன் கைது
தி.மலை: திருவண்ணாமலை அருகே, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருந்து கடைக்காரரர் மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், 24; இவர், 17 வயது சிறுமியை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, சிறுமியை கர்ப்பமாக்கினார். பின் சிறுமியிடம், 'கருவை கலைத்து விடு, 18 வயது ஆன பிறகு திருமணம் செய்து கொள்கிறேன்' எனக்கூறியுள்ளார். கருவை கலைப்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் மருந்துக்கடை நடத்தி வரும் சிவா ஆனந்தன், 40, என்பவருக்கு, 90,000 ரூபாய் கொடுத்து, அவரது மருந்து கடையிலேயே கருக்கலைப்பு செய்தார். அதன் பின் பேசுவதை கல்யாணசுந்தரம் தவிர்த்ததால், திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். விசாரணையில் கருக்கலைப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். மருந்து கடைக்கும் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தும் மருந்துகளை கைப்பற்றினர். மருந்து கடைக்காரர் சிவா ஆனந்தனும், கருக்கலைப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிந்தது. சிவா ஆனந்தன், கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர்.